கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)

 


வெ.விஜய்


சொல்லிய வார்த்தையிலே - கண்ணம்மா

        சோகந் தெரியுதடி

மெல்ல நடைபயின்றே - என்றன்

        மேனி தழுவிடடி (41)

 

விவேக்பாரதி


தழுவிடுந் தென்றல்தரும்  - சில்லெனும்  

        தண்ணிலை உன்னினைவே

மழுவெனக் கண்ணுடையாய் - கண்ணம்மா

        மதகரி முன் தோன்றினேன் (42)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


ஏனென்ற கேள்வியில்லை - கண்ணம்மா

        என்றன் அருகிருக்க

நானென்ற எண்ணமில்லை - நீயென்றன்

        ஞாலப் பெருந்துணையே! (43)

 

வெ.விஜய்


பெருமை என்றுணர்ந்தே - உன்னைப்

        பெற்று வளர்த்தவளை

அருமை என்றுசொன்னேன் - கண்ணம்மா

        அருகில் நிற்கையிலே (44)

 

விவேக்பாரதி


நிற்பது நீயானால் - கண்ணம்மா

        நிலவுக்குக் காய்ச்சல்வரும்

சொற்பதம் நீயானால் - என்கவிச்

        சோதி உயிர்பெறுமே (45)

  

நிறோஷ் ஞானச்செல்வம்


உயிர்பெற்ற தென்றன்வரம் - கண்ணம்மா

        உன்பிறப்(பு) இங்குற்றதால்

அயிர்பெற்ற வாய்மொழியாய் - நெடுங்கார்

        அளகத்தில் தளைக்குதியோ! (46)


(அயிர் – வெல்லம்)

 

வெ.விஜய்


குதிக்கு முள்ளத்தினை- கண்ணம்மா

        கூவி அழைத்திடடி

பதித்த வைரங்களாய் -  உன்றன்

        பற்களும் மின்னுதடி (47)

 

விவேக்பாரதி


மின்னல் இழைத்தநகை - வெண்ணிலா

        மின்னும் எழில்வதனம்

ஜன்னல் உரசும்மணம் - கண்ணம்மா

        சாதனை உன்னுறவு (48)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


உறவு மாறிவிடும் - கண்ணம்மா

        உலகம் பொய்த்துவிடும்

கறந்த பாலனையோய் - நின்னையும்

        மறக்கக் கூடுவதோ (49)

 

வெ.விஜய்


தோகை மயிலிறகோ - கண்ணம்மா

        தூய தேன்துளியோ

வாகை மரநிழலோ - உன்றன்

        வருகை இனிக்குதடி (50)


தொடரும்...

Comments

Popular posts from this blog

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)