கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

 


விவேக்பாரதி


வேண்டாத நேரமில்லை - கண்ணம்மா 

        விரும்பாத நாட்களில்லை 

ஆண்டாள் உனைத்தொடவே - கிள்ளையாய் 

        ஆருடல் திரித்திடுவேன் (31)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


திரித்த நூல்நுனியில் - செஞ்சுடர்

        திரளும் மணிவிளக்கே

சிரித்த மலர்முகமே - கண்ணம்மா

        சிந்தை மிகுத்தவளே! (32)

 

விவேக்பாரதி


மிகுதிப் பொருள்கொடுத்தும் - வானத்தில் 

        மின்னல் இடிப்பதில்லை 

தகுதிக் குறும்வினையாம் - கண்ணம்மா 

        தகுந்தநின் பார்வையைப்போல் (33)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


போர்க்கலை யறிந்தனவோ - நீகொண்ட

        பொல்லாப் புருவவிற்கள்

பார்க்கையில் நாணேற்றும் - கண்ணம்மா

        பாதகம் செய்யாதேடி! (34)


வெ.விஜய்


தேடும் பார்வையிலே - கண்ணம்மா

        தீயும் நிறையுதடி

ஓடும்  நதியினிலே - உன்றன்

        உருவந் தெரியுதடி (35)

 

விவேக்பாரதி


உருவம் தெரிவதெல்லாம் - கண்ணம்மா

        உன்றன் உருவமடி

கருவம் உடையநிலா - உன்முன்னே

        கறையொடு தோன்றுமடி (36)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


மடியினில் தலைசாய்ப்பாய் - கண்ணம்மா

        வருடியு னையணைப்பேன்

நொடியினில் காதல்தமிழ் - கவியென

        நுவலுவை நீயல்லவோ (37)


வெ.விஜய்


நீயில்லா நேரத்திலே - கண்ணம்மா

        நிலவும் வருவதிலையே

ஆயிரம் முத்தங்களைக் - கடல்

        அலையும் பெறுவதிலையே (38)

 

விவேக்பாரதி


ஏங்கித் தவிப்பதெல்லாம் - கண்ணம்மா

        என்றோ தொலைந்ததடி

தூங்கடி தோளணையில் - சொல்லினால்

        தோகைக் கவரிசெய்வேன் (39)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


வேய்ங்குழல் இசைத்திடவோ - கண்ணம்மா

        வீணையைப் பழகிடவோ

பாங்கியே உன்றனுக்கு - உற்றதொரு

        வாத்தியம் ஏதுசொல்லு (40)


தொடரும்...


Comments

Popular posts from this blog

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)