கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (11-20)



விவேக்பாரதி

புகுந்த நாள்முதலாய்க் - கண்ணம்மா
        புரியாப் பலநிகழ்வு!
புகழை வெறுத்துவிட்டேன் - மஞ்சமும்
        புதரெனக் குத்துதடி (11)

நிறோஷ் ஞானச்செல்வம்

குத்தும் முட்களெலாம் - கண்ணம்மா
        குவிமலர் ஆயினவோ
பித்துப் பிடித்ததுவோ - காட்சியிற்
        பிழைகள் தோன்றுதடி! (12)

விவேக்பாரதி

தோன்றும் சுடர்களிலும் - கண்ணம்மா
        தோகை உனதுமுகம்
ஊன்றிக் கிடக்குதடி - பிம்பங்கள்
        உள்ளம் நிறைக்குதடி (13)

நிறோஷ் ஞானச்செல்வம்

நிறைந்த கதிரமுதே - கண்ணம்மா
        நினைவி லெழுங்கலையே
உறைந்த அக்கினியே - உள்ளூர
        ஒளிரும் தண்புனலே! (14)

விவேக்பாரதி

புனலுங் குளிர்கொடுக்கக் - கதிரவன்
        புதுமை இதங்கொடுக்க
மனத்தில் நினைத்திருந்தேன் - கண்ணம்மா
        மழையின் வடிவில்வந்தாய் (15)

நிறோஷ் ஞானச்செல்வம்

வந்தாய் வளமுற்றேன் - கண்ணம்மா
        வதனப் பொலிவில்நிதம்
தந்தாய் புதுவிடியல் - என்றனுயிர்
        தளைக்கும் காரிகையே! (16)

வெ.விஜய்

காரிகைக் கனிமொழியே - நீயெனக்குக்
        கற்பகக் காமமடி
தூரிகைக் கூந்தலிலே - கண்ணம்மா
        தொலைந்து போனேனடி (17)

விவேக்பாரதி

தொலைதூர மின்னலடி - கண்ணம்மா
        தொடுந்தூரத் தென்றலடி
கலைநேரக் கவனமடி - நீயுந்தான்
        கவிதையின் சொற்களடி (18)

நிறோஷ் ஞானச்செல்வம்

சொற்சுவைப் பொருளாகிறாய் - கண்ணம்மா
        சோகத்திற் சுகமாகிறாய்
கற்குவை வாழ்தேரைநான் - ஊணிட்டுக்
        காக்கின்ற இறையாகிறாய் (19)

வெ.விஜய்

இறைவன் தேடுகிறான் - என்னை
        இமையில் மறைப்பவளே
உறைந்த பனித்துளியாய்க் - கண்ணம்மா
        உள்ளம் கிடக்குதடி (20)

தொடரும்...

Comments

Popular posts from this blog

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)