கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (1-10)
நிறோஷ் ஞானச்செல்வம்:
கொல்லயில் தானோடி கண்ணம்மா - நீ
கோபச் செந்நிறமோ
ஒல்லைக் கெதிர்ப்பதமோ கண்ணம்மா - நீ
ஓதக்கடல் நுரையோ!
***
விவேக்பாரதி:
வில்லின் விசையடிநீ - கண்ணம்மா
வீசும் விழிச்சுடரில்!
ஒல்லைக் கெதிர்ப்பதந்தான் - காதலின்
ஒற்றை மொழிசொலவோ? (1)
நிறோஷ் ஞானச்செல்வம்:
சொல்லும் மொழிகளிலே - கண்ணம்மா
சொக்க வைத்திடுவாய்
எல்லை எங்குளதோ - உன்னுடைய
இன்பப் பூஞ்சிரிப்பில் (2)
விவேக்பாரதி:
சிரிப்பில் புதியவளே - கண்ணம்மா
சிக்கிமுக்கி இதழே
உரசல் நெருப்புதரும் - குளிரினில்
உடலம் நடுங்குகிறேன்! (3)
நிறோஷ் ஞானச்செல்வம்:
நடையே ஒயிலாகும் - கண்ணம்மா
நகையே எழிலாகும்
விடையே என்வாழ்வாம் - அஃதைநீ
விள்ளுவ தெப்போது? (4)
விவேக்பாரதி:
எப்பொழுதுன் சிரிப்பு? - கண்ணம்மா
எப்பொழுதுன் னணைப்பு?
எப்பொழுதுந் தவிப்பு - முன்னம்வா
ஏக்கத்தளை யறுத்து (5)
நிறோஷ் ஞானச்செல்வம்:
அறுக்கும் கவலைகளைக் - கண்ணம்மா
அறுக்கத் தெரிந்தவளே
இறுக்கும் கைகளிலே - என்னையிங்கு
இயக்கும் ஒருவிசையே! (6)
விவேக்பாரதி:
விசையின் விதியடிநீ - உன்னுள்ளே
விதைத்த கணமடிநான்
அசைவும் அமைதியுமாய்க் - கண்ணம்மா
ஆகி இயக்குகிறாய் (7)
நிறோஷ் ஞானச்செல்வம்:
இயக்கம் நீயலவோ - கண்ணம்மா
இயங்கா மோனமும்நீ
தயக்கம் உடைத்தெறிந்து - என்னாவி
தழுவித் தேற்றுகின்றாய்! (8)
விவேக்பாரதி:
இன்றாய் நாளையுமாய்க் - கண்ணம்மா
இதயத்தின் நேற்றுமென
நின்றாய் நெஞ்சுக்குள்ளே - உன்னைப்போய்
நேரில் தொடத்துடித்தேன் (9)
நிறோஷ் ஞானச்செல்வம்:
துடித்த தென்பிழையே - கண்ணம்மா
தூலம் தாண்டிவிட்டாய்
வடித்த பாட்டினிமை - போலுயிர்த்து
வந்தென் உட்புகுந்தாய்! (10)
தொடரும்...

Comments
Post a Comment