கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (21-30)
நிறோஷ் ஞானச்செல்வம்
கிடப்பில் பலசேதி - கண்ணம்மா
கேட்பது யாரோடி
நடக்கப் போகையிலே - ஒவ்வொன்றாய்
நாமவை பேசிடலாம் (21)
வெ.விஜய்
பேசும் பறவைகளைக் - கண்ணம்மா
பேணி வளர்ப்பதுபோல்
வீசும் தென்றலுக்கும் - கண்ணம்மா
வெட்கத்தைக் கூறடியோ (22)
விவேக்பாரதி
அடிகள் அதிகம்பட்டு - நெஞ்சந்தான்
அழுது கதறுகையில்
பிடியாய்த் துணைக்குவந்தாய் - கண்ணம்மா
பிழைத்தேன் உனதருளால் (23)
நிறோஷ் ஞானச்செல்வம்
ஆலப் பெருமரமாய்க் - கண்ணம்மா
அன்பு நிலைத்திருக்கும்
கோலச் சித்திரமே - எண்ணத்திற்
கொஞ்சும் தமிழழகே! (24)
வெ.விஜய்
அழகுக் கேற்றவொரு - கண்ணம்மா
அன்பு இருக்குதடி
நிழலும் பின்தொடரக் - கண்ணம்மா
நெஞ்சம் நினைக்குதடி (25)
நிறோஷ் ஞானச்செல்வம்
நினைவில் இருப்பவளே - நேரினில்
நிகழ்வதும் உன்னிருப்பே
நனைதல் இனிமையடி - கண்ணம்மா
நாமன்பின் பொழிவினிலே! (26)
வெ.விஜய்
பொழியும் மேகங்களும் - கண்ணம்மா
பொறுமை காக்குமடி
விழிகள் திறந்திடவே - நெஞ்சினில்
வேலாய் இறங்குதடி (27)
நிறோஷ் ஞானச்செல்வம்
தடித்த வன்மமெலாம் - தம்நிலை
தவித்தே ஓடிவிடும்
இடித்து நீயுரைப்பாய் - கண்ணம்மா
ஏற்றம் தருகுவையே! (28)
வெ.விஜய்
தந்த சொற்களிலே - கண்ணம்மா
தாகமுந் தீர்ந்ததடி
முந்தை இரவினிலே - உன்றன்
முந்தியில் கிடக்கையிலே (29)
நிறோஷ் ஞானச்செல்வம்
கைகள் இணைத்திருப்போம் - நதியோரம்
கதைத்தே நாம்நடப்போம்
உய்யும் வழியிதுவே- கண்ணம்மா
உளறல் எனவேண்டா! (30)
தொடரும்...

Comments
Post a Comment