கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)
விவேக்பாரதி
இனிக்கும் மதுக்குடமே - கண்ணம்மா
இன்பத் திரவியமே!
மனிதப் பிறவியிலே - நான்பெறும்
மாண்புகள் உன்னருளே! (51)
நிறோஷ் ஞானச்செல்வம்
அருளொடு பொருளெல்லாம் - கண்ணம்மா
அடைந்தனன் என்றிருந்தேன்
இருளெனும் மாயையடி - நீயல்லால்
எல்லாமும் என்றனுக்கே! (52)
வெ.விஜய்
கேட்டதைக் கூறடியோ - கண்ணம்மா
கேள்வியும் ஏனடியோ
பாட்டொன்று பாடடியோ - என்னைப்
பத்திரம் போடடியோ (53)
விவேக்பாரதி
பாடல் பலமிழக்கும் - கண்ணம்மா
பார்வைச் சுரத்தின்முன்னே!
ஆடல் பொலிவிழக்கும் - ரம்பையரை
ஆளுங் குலத்துப்பெண்ணே! (54)
நிறோஷ் ஞானச்செல்வம்
ஏகாந்தம் இனிக்குதடி - கண்ணம்மா
எண்ணச் சுழலுயிர்ப்பில்
மீகாமன் ஆகிவிட்டேன் - உன்னையே
மீட்கும் அலைகளிலே (55)
வெ.விஜய்
அலையை மிஞ்சிவிடும் - கண்ணம்மா
ஆண்மை பெருகுதடி
விலையும் ஏதுமில்லை - உடல்
வித்தைகள் நிறைந்திருக்க (56)
விவேக்பாரதி
இருப்ப தோருயிர்தான் - உனக்கென
எழுதிக் கிழிப்பேனதைத்
திருப்பு முனையெனநீ - கண்ணம்மா
திசைகள் பலவிங்குநான்! (57)
நிறோஷ் ஞானச்செல்வம்
நாதத்தில் அநாகதமே - கண்ணம்மா
ஞானத்துப் பொற்சுடரே
பாதத்து மென்மையினால் - இங்குற்ற
பஞ்செல்லாம் நாணுதம்மா (58)
வெ.விஜய்
மார்கழிக் காற்றினிலே - கண்ணம்மா
மையல் கொண்டிடுவோம்
மார்புக்குள் மூச்சிரைக்கக் - கண்ணம்மா
மன்மதம் கண்டிடுவோம் (59)
விவேக்பாரதி
கண்டிடக் கண்களும்நீ - கண்ணம்மா
காண்கின்ற காட்சியும்நீ
உண்டிடத் தேனடைநீ - நானிங்கே
உயர வருங்கரடி! (60)
தொடரும்...
கரடி விடுதல் போல் - ஊரார்
ReplyDeleteகதைகள் பிதற்றுகிறார் .
புரளி கிளப்புகிறார் , கண்ணம்மா
பொய்யை மெய்யாக்குவோம்.